மூடு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்

SPORT

 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,

காஞ்சிபுரம் மாவட்டம்

 

 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்கான முக்கிய நிறுவனமாகவும் விளையாட்டு தொடர்பான அரசின் வெவ்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்தும் அமைப்பாகவும் விளங்குகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இளைஞர்களின் ஆற்றலையும், உற்சாகத்தையும், ஆர்வத்தையும், ஒருமுகப்படுத்தி விளையாட்டில் அவர்கள் தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை படைக்க ஏதுவாக தமிழ்நாடு அரசால் 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உருவாக்கப்பட்டது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த ஆணையத்தின் தலைவர் ஆவார்.  தமிழகத்தில் விளையாட்டிற்கான தலைமை அமைப்பாக விளங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் குறித்த கொள்கை முடிவுகளை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது ஆணையத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முக்கிய நோக்கங்கள்:-

  1. மாநிலத்தில் விளையாட்டை ஊக்குவித்து மேம்படுத்துதல், விளையாட்டின் நிலையை உயர்த்துவதற்காக திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்துதல், விளையாட்டு மற்றும் போட்டி விளையாட்டுகளில் தரத்தை உயர்த்துதல்.
  2. விளையாட்டுக்கள் மற்றும் போட்டிகளை மேம்படுத்த திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
  3. தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றிகரமாக பங்கேற்க செய்ய ஏதுவாக திறமைமிக்க விளையாட்டு வீரர்களை கண்டறிந்து ஒருமுகப்படுத்தி பயிற்சி அளித்தல் மற்றும் அவர்களுக்கு நிதி உதவி அளித்தல்.
  4. தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் மென்மேலும் உயர்ந்த அளவில் சாதனைகள் புரிய பல்வேறு ஊக்கத் தொகைகள் மற்றும் விருதுகளை அளித்து ஊக்குவித்தல்
  5. மாநிலத்தில் பல்வேறு நிலைகளில் விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை திட்டமிட்டு மேம்படுத்துதல்.
  6. விளையாட்டு மேம்பாடு தொடர்பான ஆராய்ச்சிகளை துவக்கி மேற்கொள்ளுதல், ஆதரவளித்தல், உற்சாகமளித்தல் மற்றும் விளையாட்டு தொடர்பான மருத்துவம், உளவியல், இயன்முறை மருத்துவம் மற்றும் அதை சார்ந்த இதர அறிவியல் துறைகளில் மேம்படுத்துதல்.
  7. மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு தேவைகளை அங்கீகரித்தல் மற்றும் அவர்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வசதி ஏற்படுத்தித் தருதல்.
  8. பல்வேறு விளையாட்டுகளுக்கும் மேம்பட்ட பயிற்சி அளிக்க ஆதரவளித்தல்.
  9. மக்களிடையே உடற்தகுதி விளையாட்டில் ஆர்வம் மற்றும் ஆரோக்கிய வாழ்வு குறித்து உள்ளுணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான மற்றும் வலிமையான மாநிலத்தை உருவாக்குதல்

 

விளையாட்டு மைதான வசதிகள்:-

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 400 மீ தடகள ஓடுதலம், கேலரி, கால்பந்து மைதானம், ஹாக்கி மைதானம், ஸ்குவாஷ் (உள்விளையாட்டு அரங்கம்), குத்துச்சண்டை வளையம், இறகுப்பந்து (உள்விளையாட்டு அரங்கம்), பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், டென்னிஸ் மைதானம் வாலிபால் மைதானம், கூடைப்பந்து மைதானம், நீச்சல் குளம், குழந்தைகள் நீச்சல் குளம், கைப்பந்து மைதானம் போன்ற வசதிகள் உள்ளது

 

 

கட்டண விவரங்கள்:-

கட்டண விவரங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

திட்டங்கள்:-

1.) நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டம்:

ஒவ்வொரு ஆண்டும், ” நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டம்” 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு 12 நாட்கள் நடத்தப்படுகிறது. நீச்சல் தெரியாதவர்களுக்கு இந்த 12 நாட்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்ட முடிவில், சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

2.) கோடைகால பயிற்சி முகாம்:

கோடைக்கால பயிற்சி முகாம் குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்துவதாகும்.  ஒவ்வொரு ஆண்டும், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி மற்றும் கைப்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளை 16 வயதிற்குட்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு தகுதிவாய்ந்த பயிற்சியாளர்கள்/ விளையாட்டு நிபுணர்களுடன் பயிற்சியளிக்கபடும்.

3.) இருப்பிடம் இல்லா பயிற்சி முகாம்:

உலக  திறனாளர்கள்  கண்டறிதல் திட்டம் மூலம் 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் படிக்கும் திறமையான சிறுவர் மற்றும் சிறுமிகளுக்காக 2 கல்வி மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் 5 நாட்கள் இருப்பிடம் இல்லா பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. தகுதியான பயிற்சியாளர்கள் / விளையாட்டு நிபுணர்கள் மூலம் இந்த சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு பல்வேறு விளையாட்டுத் திறன்கள் கற்பிக்கப்படுகின்றன.

4.) இருப்பிட பயிற்சி முகாம்:

 ஒரு கல்வி மாவட்டத்திலிருந்து 60 திறமையான சிறுவர் மற்றும் சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அளவிலான இருப்பிட பயிற்சி முகாம்களில் 15 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

  1. உலக திறனாளர்கள்  கண்டறிதல் திட்டத்தில் அவர்களின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்படுகிறது.
  2. அடையாளம் காணப்பட்ட மாணவ மாணவிகளுக்கு தகுதியான பயிற்சியாளர்கள் / நிபுணர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  3. இந்த மாணவ மாணவிகளுக்கு SDAT இன் சிறப்பு கல்வி மற்றும் விளையாட்டு விடுதிகளில் சேருவதற்கான தேர்வு சோதனைகளில் கலந்து கொள்கிறார்கள்.

 

5.) விளையாட்டு விடுதி தேர்வு:

விளையாட்டு விடுதிகளில், 7, 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் சிறுவர் மற்றும் சிறுமியர் இருவருக்கும் மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் விளையாட்டு தேர்வு சோதனைகள் நடத்தி அதில் தேர்ச்சி பெற்றவர்கள் விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயிற்சி அளிக்கப்படும். இந்த விளையாட்டு விடுதியில் சத்தான, உணவு, இருப்பிடம், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகின்றன.

6.) மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்- ஜூலை ஆகஸ்ட் அக்டோபர் மாதங்களில் போட்டிகள் நடத்தப்படும்:

விளையாட்டு வீரர்கள் தொடர்ச்சியாக விளையாட்டுகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும், போட்டி அனுபவத்தைப் பெறவும் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

7.)திறன்கண்டறிதல் முகாம்:

இந்த முகாமில், 14 வயதுக்குட்பட்ட 10 சிறுவர்கள் மற்றும் 10 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயணப்படி, சத்தான உணவு, விளையாட்டு சீருடை, 6 மாத காலத்திற்கு நீச்சல் விளையாட்டு மாணவ-மாணவிகளுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

8.) மாவட்ட அளவிலான கேரம் போட்டி:

கேரம் போட்டிகள் 2008-09 முதல் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், பஞ்சாயத்து / நகர பஞ்சாயத்து / நகராட்சி பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிப்பதற்காக போட்டிகள் மிக இளையோர் மற்றும் இளையோர் (1 முதல் 5 ம் வகுப்பு வரை மற்றும் 6 முதல் 12 ம் வகுப்பு வரை) பயில்பவர்கள் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது

9.) அண்ணா மிதிவண்டி போட்டி:

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மாவட்ட அளவிலான மிதிவண்டி போட்டி நடத்தப்பட்டு வருகிறது.  இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

10.) உடற்கல்வி ஆசிரியர்கள் / உடல் இயக்குநர்களுக்கான பயிற்சி முகாம்:

வளர்ந்து வரும் விளையாட்டு உலகில் மாறிவரும் விளையாட்டு விதிமுறைகளை தெரிந்து கொள்ளவும் உடற்கல்வி ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர்களுக்கு ஆண்டுதோறும் இந்த புத்தாக்கப் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

11.) மாற்றுத்திறனாளுக்கான விளையாட்டுகள்:

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு பங்கேற்பதை ஊக்குவிக்கவும் மனப்பாங்கினை மேம்படுத்தவும் நம்பிக்கையை ஏற்படுத்தவும் தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படுகிறது.

12.) தேசிய இளைஞர் விழா:

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு ஜனவரி 12 முதல் 16ம் தேதி வரை தேசிய இளைஞர் விழா இசை நடனம் கிராமப்புற பாடல்கள் போன்ற 18 வகையான போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது

13.)அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள்:

விளையாட்டு செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் பணியாளர்கள் மன அழுத்தம் மற்றும் மன சோர்விலிருந்து விடுபடுகின்றனர் இது பணியாட்களின் திறனையும் ஆற்றலையும் மேம்படுத்துவதுடன் அலுவலகப் பணியை திறம்பட கையாளவும் உதவுகிறது

14.)முதலமைச்சர் கோப்பை:

முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் என இரண்டு கட்டங்களில் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகள் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் 10 விளையாட்டுப் பிரிவுகளில் நடத்தப்படுகின்றன.

15.) ஹாக்கி லீக்:

இந்தியாவின் தேசிய விளையாட்டான வளைகோல் பந்து நாடு முழுவதும் விளையாடப்படுகிறது. இவ்விளையாட்டில் உடல் உறுதியும் ஆற்றலும் அதிகமாக தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோவில்பட்டி, (தூத்துக்குடி மாவட்டம்) ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி ஆகிய 7 இடங்களில் செயற்கை இழை வளைகோல்பந்து ஆடுகளங்கள் உள்ளன. நமது விளையாட்டு வீரர்களுக்கு போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் பொருட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வளைகோல்பந்து லீக் போட்டிகளை கீழ்க்காணும் நிலைகளில் நடத்துகிறது.
1.மாவட்ட அளவில்
2.மண்டல அளவில்
3.மாநில அளவில்

16.) மாவட்ட அளவிலான உலக திறனாளர்கள் கண்டறிதல் திட்டம்:

திறன்மிக்க மாணவர்களை கண்டறிவதற்காக உடற்திறன் தேர்வு போட்டிகள் முதற்கட்டமாக பள்ளி அளவில் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவோடு  திறனாளர்ளை கண்டறியும் பணி பள்ளிக் கல்வித் துறையால் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளியில் படிக்கும் VI, VII மற்றும் VIII மாணவர்களுக்கு இந்தப் போட்டிகளை நடத்தி அதன் முடிவுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்களுக்கு அனுப்பப்படுகின்றனர். கீழ்காணும் உடல்திறன் போட்டிகள் இயக்கத் திறன்களை கண்டறிவதற்கு உதவுகின்றன.

1. 50 மீட்டர் ஓட்டம்
2. சிறுமியர்களுக்கான 600 மீட்டர் ஓட்டம்
3. சிறுவர்களுக்கான 800 மீட்டர் ஓட்டம்
4. 4 கிலோ குண்டு எறிதல்
5. நீளம் தாண்டுதல்
6.6×10 ஓடித் திரும்புதல்

அடுத்தகட்டமாக பள்ளிகளில் நடத்தப்பட்ட உடற்திறன்  போட்டிகளில் 10 மதிப்பெண்களுக்கு 10,9 அல்லது 8 மதிப்பெண்கள் பெறும் சிறுவர் சிறுமியர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்படுகிறது.  மண்டல அளவில் போட்டிகள் 9 இடங்களில் நடத்தப்படுகின்றன ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் முதல் பத்து வெற்றியாளர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சிறப்பு அகாடமியில் சேர்த்துக் கொள்வதற்கான தேர்வுப் போட்டிகள் கலந்துகொள்ள தேர்வு செய்யப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் முதன்மை நிலையை அடைவதற்காக அவர்களுக்கு சிறப்பு மற்றும் தொடர் பயிற்சி வழங்கப்படுகிறது.

17.) கிராம விளையாட்டுகள்:

தடகளம், வாலிபால், கபடி மற்றும் கால்பந்து ஆகிய விளையாட்டுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடத்தப்படுகின்றன. கிராமப்புற மக்களிடையே விளையாட்டுகளை ஊக்குவிக்கும் பொருட்டு வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் / பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

தொடர்பு முகவரி:
பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம்,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்,
பழைய ரயில்வே சாலை, காஞ்சிபுரம் 631 502.
அலுவலக தொலைபேசி எண்: 044-27222628
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தொலைபேசி எண்: 7401703481
அலுவலக மின்னஞ்சல் : dsokpm@gmail.com